இந்திய பங்குச்சந்தை இன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.

நான் அண்மையில் பல தமிழ் வலை பூக்களை ,வாசித்து கொண்டு இருக்கை இல் , "பொற்காலமே இன்மேல்தான் " என்ற arrkay வின் வலைபதிவில், ஒரு சிறந்த  கட்டுரை இனை கண்டேன் . இதை நமது பதிவில் போட்டால் , நிறய நண்பர்களுக்கு  போய் சேரும் என்ற எண்ணத்தில் , இந்த பதிவினை இடுகின்றேன் . இந்த கட்டுரை ஆனது "நாணயம் விகடனில்" வெளிட பட்ட ஒன்றாகும்.இதில் , பங்குச்சந்தை நிபுணர் ஸ்ரீராம் அவர்களின் ,இந்திய பங்குச்சந்தை இன் எதிர்காலம்  பற்றிய  கணிப்புகள் .

நீங்கள் 2005-ம் வருஷம் பங்குச் சந்தையில் அடியெடுத்து வைத்திருந்தால், நிறைய லாபம் பார்த்திருப்பீர்கள். பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த 2007-ம் ஆண்டில் சந்தைக்குள் நுழைந் திருந்தால், நஷ்டமடைந்து ஏன்தான் பங்குச் சந்தையில் நுழைந்தோமோ என்று புலம்பித் தீர்த்திருப்பீர்கள். அதன் பிறகு பங்குச் சந்தை ஏறவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்த பெரிய வருமானத்தையும் சந்தை நமக்கு தந்துவிடவில்லை.


இந்நிலையில், பங்குச் சந்தை முதலீட்டால் என்ன பிரயோஜனம்? பேசாமல் சந்தையை விட்டு ஒதுங்கிவிடலாமா? என்று யோசிப்பவர்கள் இன்று ஏராளம். இதுமாதிரி யோசிக்கிறவர்களுக்கு பங்குச் சந்தை நிபுணர் ஸ்ரீராம் சொன்ன பதில் நம்பிக்கையும், உற்சாகமும் தருவதாக இருந்தது.

''2006-07-ம் ஆண்டு சந்தை கண்ட ஏற்றத்தைவிட இனிவரும் காலங்களில்தான் அதிக ஏற்றம்  இருக்கப் போகிறது. கடந்த காலங்களில் நாம் சந்தித்த உச்சங்களைத் தாண்டி, பல புதிய மைல் கற்களை நாம் எட்டுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. இத்தனை நாளும் சந்தையில் இருந்துவிட்டு, பொற்காலம் இனிமேல்தான் வரப் போகிறது என்கிற நிலையில் சந்தையை விட்டு செல்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது!'' என்றார்.
பங்குச் சந்தை இனிவரும் காலத்தில் எந்தத் திசையில் செல்லும் என்பதையும், எதிர்காலத்தில் நமக்கிருக்கும் சாதகமான அம்சங்களையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

 
தற்போதைய நிலவரம்!
கடந்த வாரங்களில் சந்தை மிக மோசமாகத் தான் இருந்தது. ஓரளவு பெரிய சரிவை சந்தித்த சந்தை 'கன்சாலிடேட்’ ஆகத் தேவையான காலத்தை எடுத்துக் கொண்டு வருகிறது. நிஃப்டி தற்போது 4700 என்ற நிலையை அடைந்திருப்பதால் இதை வாங்கும் தருணமாக முதலீட்டாளர்கள்

நினைத்து தங்களது முதலீட்டைத் தொடங்கலாம். ஆனால், இதன் பிறகு சந்தை சரியவே சரியாது என்ற நினைப்பு முதலீட்டாளர்களுக்கு வரவேண்டாம். 4700 என்ற முக்கிய சப்போர்ட் நிலையை உடைத்துக் கொண்டு கீழே சென்றிருப்பதால் சந்தை இன்னும்கூட இறங்குவதற்கு வாய்ப்பு உண்டு. என்றாலும் இப்போதிருந்தே முதலீட்டை ஆரம்பிப்பது நல்லது.

இப்போதைய நிலைமையில் இருந்து இன்னும் 1000 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி சரிய வாய்ப்பிருக்கிறது. என்றாலும் எப்போது வேண்டுமானாலும் சந்தை திரும்பி மேலே செல்லலாம். அந்த நேரத்தில் 'அடடா, வாங்காமல் விட்டுவிட்டோமே’ என்று வருத்தப் படுவதைவிட இப்போதிருந்தே அவ்வப்போது முதலீடு செய்வதுதான் நல்லது. தற்போதைய நிலையில் சிறிது முதலீடு செய்யலாம். இன்னும் சரிந்த பிறகு கொஞ்சம் முதலீடு செய்யலாம். மிகவும் குறைவான விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்பதுதான் முதலீட்டாளர்களுக்கு அழகே தவிர, ஏறிய பங்கினை துரத்திப் பிடிப்பதல்ல.
எதிர்காலம் எப்படி?
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சந்தை இதே நிலைமையில்தான் இருக்கும். அதன் பிறகு சந்தை ஏறுமுகத்துக்கு திரும்பும். மார்ச் மாதத்துக்குப் பிறகு சந்தை சரிவதற்கான வாய்ப்பு குறைவு. அதற்காக மார்ச் மாதத்துக்குப் பிறகு உடனே ஏறும் என்று சொல்லிவிட முடியாது. சந்தை மெள்ள மெள்ள 'கன்சாலிடேட்’ ஆவதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கும். 2013-ம் ஆண்டு ஆரம்பம் முதல் சந்தை ஏற ஆரம்பிக்கும். அந்த வருடத்தில்தான் சந்தையின் பழைய உச்சமான நிஃப்டி 6300 என்கிற புள்ளியை கடந்து செல்லும். நம்மில் சிலர், தாங்கள் ஏற்கெனவே பார்த்த உச்சத்தைத் தாண்டினால் மட்டுமே சந்தை ஏறும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அப்போதுதான் முதலீடு செய்வது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி இல்லாமல், இப்போதிருந்தே முதலீடு செய்ய ஆரம்பிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.

இதை நான் அழுத்திச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. சந்தை எப்போது தனது பழைய உச்சத்தை தாண்டுகிறதோ, அதன் பிறகு சந்தை அதிவேகமாகச் செல்லும். அதிலிருந்து 2020 -ம் ஆண்டுவரை தொடர்ந்து சந்தை ஏற்றத்திலேயே இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தை சரியாதா என்றால், அவ்வப் போது சரியத்தான் செய்யும். ஆனால், நீண்டகால நோக்கத்தில் பார்த்தால் ஏறுமுகத்தில்தான் இருக்கும். அந்த சமயத்தில் நிஃப்டி 10200 புள்ளிகளும், சென்செக்ஸ் 30000 புள்ளிகள் வரைக்கும்கூட செல்லும். 2018 முதல் 2020 -ம் வருடத்துக்குள் இந்த நிலையை நிஃப்டி அடையும்.

என்ன, நிஃப்டி 10000 புள்ளி களுக்குச் செல்லுமா என்று நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. காரணம், அதையும் தாண்டி மேலே செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எப்போது 10200 புள்ளிகளை நிஃப்டி சந்திக்கிறதோ, அதன் பிறகு சந்தையில் கொஞ்சம் சரிவு வரலாம். அந்த சரிவு பழைய உச்சமான 6300 என்ற நிஃப்டி புள்ளிகள் வரைக்கும்கூட  இருக்க வாய்ப்பிருக்கிறது. 10200 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்ட அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்த சரிவு இருக்கும்.அதன் பிறகு மீண்டும் சந்தை ஏற ஆரம்பிக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்குள் அதாவது,  2025-ம் ஆண்டுக்குள் நிஃப்டி தோராயமாக 24000 என்ற நிலையை அடையும். நிஃப்டி 24000 என்றால் சென்செக்ஸ் 75000 புள்ளிகளை எட்டும்.
தற்போது 15000 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டிருக்கும் சென்செக்ஸ் 75000 புள்ளி களுக்கு செல்லும் என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நான் மிகவும் கன்சர்வேட்டிவ்-ஆக யோசித்துத் தான் இந்த கணிப்புகளைத் தந்திருக்கிறேன். இதையும் தாண்டி சந்தை மேலே செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது'' என்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் ஸ்ரீராம்.

''எப்படி இது சாத்தியம்?'' என்று அடுத்த கேள்வியை கேட்டோம்.
''சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகளின் அடிப்படையை வைத்து மட்டுமே இந்த எதிர்பார்ப்புகளை நான் சொல்லவில்லை. இந்தியப் பொருளாதாரம்  அடுத்துவரும் வருடங்களில் எப்படி இருக்கும் என்பதை வைத்துதான் இந்த கணிப்புகளைக் கொடுத்திருக் கிறேன்'' என்று சொன்னவர், எதிர் கால இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை நமக்கு சொன்னார்.
தற்போதைய நிலை!
உலகம் முழுவதும் பொருளா தாரச் சிக்கல்கள், அமெரிக்காவில் பிரச்னை, ஐரோப்பாவில் பிரச்னை கள் என ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும், இந்தியாவில் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லை. இந்தியாவில் பிரச்னைகளே இல்லையா என்று கேட்காதீர்கள்.  பணவீக்கத்தை தவிர வேறு பெரிய பிரச்னை எதுவுமில்லை. ஆனால், பணவீக்கமே பெரிய பிரச்னைதானே என்று நீங்கள் கேட்கலாம்.

சந்தேகமே இல்லாமல் பண வீக்கம் இப்போதைக்குப் பெரிய பிரச்னைதான். ஆனால், சீரான பணவீக்கம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜப்பான் போன்ற நாடுகளைப் பார்த்தால், அங்கு பணவாட்டம் தான் இருக்கிறது. அந்த நாட்டின் வட்டி விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம்தான். நாம் அந்த நிலைமையில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டால்தான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.

நாம் அனைவரும் பண வீக்கத்தைப் பற்றி பேசுகிறோமே தவிர, உயர்ந்துவரும் சம்பளங்களைப் பற்றி பேசுவதே இல்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் 100 ரூபாய் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்தது. ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு கீழ் யாருக்கும் சம்பளம் கிடையாது என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை அதிகரித்துள்ளது. குறுகிய காலத்தில் சில பிரச்னைகள் இருந்தாலும், நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும்போது மத்திய அரசு சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.

உலகின் முக்கியமான நாடுகள் என்று சொல்லக்கூடிய எந்த நாடுகளின் ஜி.டி.பி.யும். சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. சில நாடுகள் ஒரு சதவிகித, இரண்டு சதவிகித வளர்ச்சி என்ற நிலையில்தான் இருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகள் நெகட்டிவ் வளர்ச்சியில்தான் இருக்கின்றன. ஆனால், இந்தியாவும் சீனாவும் தான் நீண்ட கால நோக்கில் அதிக வளர்ச்சியடையும் நாடுகள் என்று சொல்லப்படுகிறது. அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற நிலையை அடையும் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

எப்படி சாத்தியம்?
இந்தியாவின் தற்போதைய ஜி.டி.பி. (2010-ம் ஆண்டின்) 1.63 டிரில்லியன் டாலர்கள். இந்த நிலையை சீனா 2004-ம் ஆண்டே அடைந்துவிட்டது. அதாவது, இந்தியாவின் வளர்ச்சியை சீனா 2004-ம் ஆண்டே அடைந்து விட்டது. இதை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால், இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை எண்ணிக்கையை சீனா 2004-லேயே எட்டிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகையைத்தான் நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக கருதினோம். ஆனால், அந்த மக்கள் தொகைதான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவப் போகிறது.
இன்னும் சில வருடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இந்தியாவில் 70% இருப்பார்கள். இந்த வயதுடையவர்கள்தான் உழைக்கும் மக்களாக, குடும்பத்துக்கு வருமானம் சேர்க்கும் மக்களாக இருப்பார்கள். இதில் 25% பேர் குழந்தைகள், மாணவர்கள், கல்லூரியில் படிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டால்கூட 45% பேர் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுவார்கள். இது இல்லாமல் 30 வயதுக்கு மேல் இருப்பவர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆக மொத்தம், இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வருமானத்தை ஈட்டுபவர்களாக  இருப்பார்கள்.
வருமானம் வரும்போது அவற்றை ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். செலவு செய்தாலும் அது நன்மைதான், சேமிப்பு அல்லது எதிலாவது முதலீடு செய்தாலும் நன்மைதான். மேலும், சேமிக்கிறவர்கள் சேமித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை. ஏதாவது ஒரு வகையில் செலவழிப்பார்கள்.

இந்த சமயத்தில் புதிய வீடு, டிவி, வாஷிங்மெஷின், கணினி உள்ளிட்ட பல பொருட்களை இவர்கள் வாங்குவார்கள். இதன் காரணமாக நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். அவர்கள் அதிக நபர்களை வேலைக்கு எடுப்பார்கள் என பெரிய பொருளாதார சுழற்சியே நடக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி நடந்ததுதான் சீனாவின் வளர்ச்சி. 2004-ம் ஆண்டு 1.6 டிரில்லியன் டாலராக இருந்த சீனாவின் ஜி.டி.பி. இப்போது 5.93 டிரில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது, சுமார் 6 வருடங்களில் சீனாவின் ஜி.டி.பி. சுமார் 3.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதேபோல, இந்திய ஜி.டி.பி.யும் சில மடங்குகள் உயர வாய்ப்பிருக்கிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஜி.டி.பி.

6 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்...
2020-ம் ஆண்டோடு இந்த வளர்ச்சி முடியப் போவதில்லை. வளர்ச்சியானது அதன் பிறகும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் அமெரிக்க ஜி.டி.பி.யை தாண்டி முதல் இடத்துக்கு செல்லும் சீனா. சில காலத்துக்கு பிறகு அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா இரண்டாவது இடத்துக்குச் செல்லும். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் 2025-ல் பங்குச் சந்தை எவ்வளவு தூரம் உயரும் என்று கணித்திருக்கிறேன்'' என்று விளக்கம் தந்தார் ஸ்ரீராம்.

எல்லாம் சரி, இந்த வளர்ச்சியில் சிறு முதலீட்டாளர்கள் எப்படி கலந்து கொள்வது? நமது அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.''சில பங்குகள் அதிக லாபத்தை தரும். சில பங்குகள் அதிக நஷ்டத்தைத் தரும். ஆனால், இண்டெக்ஸ் நஷ்டத்தைத் தராது. அதே சமயத்தில், சீரான வளர்ச்சி நீண்ட காலத்துக்கு லாபத்தைக் கொடுக்கும் என்பதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். சென்செக்ஸ் 8000 புள்ளிகள் அளவுக்கு சரிந்தால்கூட இப்போது 15000 என்ற நிலையில் இருக்கிறது. ஆனால், சென்செக்ஸ் இரண்டு மடங்கு உயர்ந்த போதும்கூட பல பங்குகள் உயரவில்லை.

மேலும், இண்டெக்ஸ் என்பது நிலையானது; டைனமிக்கானதும்கூட. ஒரு நேரத்தில் யார் சிறப்பாகச் செயல்படுவார்களோ, அவர்கள்தான் இண்டெக்ஸில் இருக்க முடியும். அதனால் இண்டெக்ஸ் தொடர்ந்து மேலே செல்லத்தான் வாய்ப்பிருக்கிறது.

இண்டெக்ஸ் என்று நான் சொன்னதை வெறும் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இண்டெக்ஸ் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜூனியர் நிஃப்டி, பேங்க் நிஃப்டி என்ற அடுத்த நிலையில் இருக்கும் இண்டெக்ஸ்களையும் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்''  என்று முடித்துக் கொண்டார்.நீண்ட கால நோக்கில் சந்தை நிச்சயம் ஏறும்; நல்ல லாபம் கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், என்ன பங்குகளை வாங்குவது என்றுதானே கேட்கிறீர்கள்? நாணயம் விகடன் 7-ம் ஆண்டு சிறப்பிதழைப் படிக்கும் வாசகர்களுக்காகவே ஏழு முத்தான பங்குகளை தேர்வு செய்து தந்தார் ஸ்ரீராம்.
''இந்த பங்குகள் தற்போதைய நிலையில் இருந்து குறைந்தபட்சம் 3 முதல் 4 மடங்குக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் தற்போதைய விலையிலே வாங்காமல் சந்தை சரிய சரிய முதலீடு செய்து வருவது நல்லது'' முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் அவர். இதோ அவர் பரிந்துரை செய்த பங்குகள்:


நன்றி -கார்த்திகேயன் ,நாணயம் விகடன்.

No comments:

Post a Comment